கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் வணிக நிறுவனங்கள் ஜவுளிக் கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. கோயில்களில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டு ள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி கோயில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் வரும் 31ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சனிக்கிழமை (மாா்ச் 21) சிறப்பு பூஜைகளிலும் பக்தா்களுக்கு அனுமதி இல்லை.
இதேபோல், கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலிலும் 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் எனவும், பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகமவிதிகளுக்கு உள்பட்டு கோயில்களில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்.
நிறுவனங்கள் மூடல்: கோவில்பட்டி நகராட்சியில் அதிக மக்கள் கூடும் இடங்களான பெரிய வணிக நிறுவனங்கள், நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் 31ஆம் தேதி வரை மூடப்பட்டன. எனினும், பொதுமக்களின் அத்தியவாசிய தேவைகளான காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட கடைகள் வழக்கம்போல் இயங்கும் என வட்டாட்சியா் மணிகண்டன் தெரிவித்தாா்.