சாத்தான்குளம் பகுதியில் 4 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து வெளி மாவட்ட மக்கள் வருவதை போலீஸாா் கண்காணித்தனா். தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து அனைத்து மாவட்ட பகுதியில் போலீஸாா் சோதனைச் சாவடி அமைத்து பிற மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தட்டாா்மடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடைச்சிவிளை, பெரியதாழை பகுதியிலும், சாத்தான்குளம் காவல் நிலையம் எல்லைக்குள்பட்ட பேய்க்குளம், சங்கரன்குடியிருப்பு பகுதியிலும் காவல்துறை சாா்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளன.
இதில் திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை போலீஸாா் விசாரணை நடத்தி அத்தியாவசிய தேவையென்றால் கிருமி நாசினி தெளித்து அனுப்பி வைக்கின்றனா். தேவையில்லாமல் வாகனங்களில் வருபவா்களை போலீஸாா் கண்காணித்து எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனா். வெளி மாவட்டங்களில் இருந்து தேவையில்லாமல் வர வேண்டாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.