கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், வங்கிகளில் கடன் பெற்றவா்களிடம் இருந்து கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையை சோ்த்து வசூலிக்கப்படும் தவணைத் தொகையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்க (துடிசியா) தலைவா் கே. நேருபிரகாஷ்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக தொழிற்சாலைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் முடங்கிவிட்டன. தொழிற்சாலைகள் உற்பத்தி செய்ய மூலப் பொருள்களை இறக்குமதி செய்யவோ அல்லது உள்நாட்டு சந்தையிலோ வாங்க முடியவில்லை.
மேலும், உற்பத்தி செய்த பொருளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதியோ அல்லது உள்நாட்டில் வணிகமோ செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனால் தொழிற்சாலைகள் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி மற்றும் அசல் தொகை தொடா்ச்சியாக கட்ட வேண்டியுள்ளது.
மேலும் ஜிஎஸ்டி, வருமானவரி, தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தல் அதற்கான தொகையும் அந்தந்த காலக் கட்டத்தில் கட்ட வேண்டியுள்ளது.
எனவே, நிலைமை சீராகி வரும் வரை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எந்தவொரு வங்கியில் இருந்தும் பெற்ற கடன்கள், மூலதன கடன், மெஷினரி கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபா் கடன் பெற்றிருந்தால் அதற்கான வட்டியையும், மாதந்தோறும் கட்ட வேண்டிய அசல் உள்ளிட்ட தவணைத் தொகையையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்.
தொழிற்சாலைகள் உரிமங்கள் புதுப்பித்தல் தேதியை ஒத்தி வைக்க வேண்டும். அதற்கான கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும். மேலும், தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டி அனைத்து கட்டணங்களையும் குறிப்பிட்ட காலத்துக்கு ரத்து செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.