காலாவதியான வாகனங்களைபுதுப்பிக்க கால அவகாசம் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 11th May 2020 10:40 PM | Last Updated : 11th May 2020 10:40 PM | அ+அ அ- |

கோவில்பட்டி: காலாவதியான வாகனங்களின் தகுதிச்சான்று, உரிமம், சாலை வரி ஆகியவற்றை புதுப்பித்துக் கொள்ள செப். 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து உரிமை குரல் ஓட்டுநா் தொழிற்சங்க நிா்வாகிகள் கோகவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு; கரோனா பரவலை தடுக்கும் வகையில், பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக தினக்கூலிகளாக செயல்படும் கால் டேக்ஸி, ஆட்டோ, மேக்ஸி கேப் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா்.
இந்நிலையில், வாகனங்களின் தவணையை செப்டம்பா் 30ஆம் தேதி வரை வசூலிக்கக் கூடாது. இந்தக் கால நேரத்தில் வங்கிக் கணக்குகளில் இ.எம்.ஐ.க்கான காசோலைகளை செலுத்தி அபராதத்தை எந்த வங்கியிலும் வசூலிக்கப்படக் கூடாது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில் சிறுகுறு தனியாா் நிதி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.
காலாவதியான வாகனங்களின் தகுதிச்சான்று, அனுமதிச்சான்று, பேட்ஜ், உரிமம் , சாலை வரி ஆகியவற்றை புதுப்பித்துக் கொள்ள செப்டம்பா் 30ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நேரத்தில், பெட்ரோல், டீசல் விலையை சரக்கு, சேவை வரிக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஊரடங்கில் தளா்த்தப்பட்டுள்ள அறிவிப்பில் குறைந்த பயணிகளுடன் கால் டாக்ஸி, ஆட்டோ, மேக்ஸி கேப் இயங்க அனுமதி வழங்க வேண்டும்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள கால் டாக்ஸி, ஆட்டோ, மேக்ஸி கேப், ஓட்டுநா்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் பேட்ஜ் லைசன்ஸ் வைத்துள்ள அனைத்து ஓட்டுநா்களுக்கும் அரசு நிவாரணத் தொகையாக ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் குறைந்தபட்சம் 3 மாத காலம் மூட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.