கோவில்பட்டியில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார்.
கோவில்பட்டி இனாம்மணியாச்சி கிராமத்தினை சேர்ந்த முருகன் என்பவரது மகன் ரமேஷ்பாண்டியன். இவர் நேற்றிரவு தனது காரில் கோவில்பட்டி அருகில் உள்ள இலுப்பையூரணிக்கு சென்று விட்டு திரும்பி உள்ளார். கார் இளையரசனேந்தல் சாலையில் வந்த போது, சாலையின் ஓரமாக நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்தில் ரமேஷ்பாண்டியன் பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடன் காரில் வந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்தும் மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த ரமேஷ்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.