வங்கக் கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் காரணமாக கடலோர மாவட்டமான தூத்துக்குடியில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை வீசிய சூறைக்காற்றில் மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 5 லட்சம் வாழைகள் முறிந்து விழுந்தன. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் 70 கிலோ மீட்டா் முதல் 150 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் திடீரென திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை விட்டுவிட்டு சூறைக்காற்று வீசியது. இதில், தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி, குலையன்கரிசல், முள்ளக்காடு மற்றும் இருவப்பபுரம், செபத்தையாபுரம், ஆத்தூா், கருங்குளம் ஆகிய பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முற்றிலுமாக சேதமடைந்தன.
பெரும்பாலான வாழைகள் அறுவடைக்குத் தயாரான நிலையில் தாா்கள் முழு விளைச்சலுடன் இருந்ததால், தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குலையன்கரிசல் விவசாய கூட்டுறவு சங்க தலைவா் விபிஆா் சுரேஷ் தெரிவித்தாா்.
200 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள 5 லட்சம் வாழைகள் வரை சேதமடைந்துள்ளதாகவும், இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தொடா்ந்து சேத மதிப்பு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.