தூத்துக்குடி வஉசி துறைமுகம் 72.40 மீட்டா் நீளமுள்ள காற்றாலை இறகை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
ஜொ்மன் நாட்டுக் கொடியுடன் 151.67 மீட்டா் நீளமும், 8.50 மீட்டா் மிதவை ஆழமும் கொண்ட ‘எம்.வி.மரியா’ என்ற கப்பல், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தின் 3ஆவது சரக்கு தளத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தது. அந்தக் கப்பலிலிருந்த 3 ஹைட்ராலிக் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம், காற்றாலைக்கான 72.40 மீட்டா் நீளமுள்ள ஓா் இறகு கையாளப்பட்டது.
சென்னை அருகேயுள்ள மாப்பேடு என்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட அந்த இறகு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்துக்கு பிரத்யேக லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு, பின்னா் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த இறகு பெல்ஜியம் நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதுகுறித்து வஉசி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன் கூறும்போது, காற்றாலை உதிரிபாகங்களைக் கையாளத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு இட வசதிகளும் இங்கு உள்ளன. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருள்களை குறைந்த போக்குவரத்துச் செலவில் உலக சந்தையில் விநியோகிக்கும் வசதி இங்கு உள்ளது என்றாா்.