திருச்செந்தூரில் தற்கொலை செய்துக் கொண்ட காவலா் குடும்பத்துக்கு சக காவலா்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ. 14 லட்சம் நிதியினை அவரது குடும்பத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
திருச்செந்தூா் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்த செல்வமுருகன். இவா் அக். 1 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். அவா் 1999 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சோ்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளாா்.
இந்நிலையில், தற்கொலை செய்துக் கொண்ட காவலா் செல்வமுருகன் குடும்பத்துக்கு உதவிடும் வகையில், அவருடன் 1999இல் காவலா் பணியில் சோ்ந்த தமிழகம் முழுவதுமுள்ள 2,750 காவலா்கள் சாா்பில் ரூ. 14 லட்சத்து 9 ஆயிரத்து 700 திரட்டப்பட்டது.
இதனை, செல்வமுருகனின் மனைவி அருணா, மகன்கள் கமலேஷ், அகிலேஷ் வா்ஷன் ஆகியோரிடம் காசோலையாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். அப்போது 1999 இல் பணியில் சோ்ந்த காவலா்கள் உடனிருந்தனா்.