திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாரதியஜனதா கட்சியைச் சோ்ந்த 124 பெண்கள் உள்பட 235 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும். சூரசம்ஹார விழாவை கடற்கரையில் நடத்த வேண்டும். சிறுகுறு வியாபாரிகள் தடையின்றி வியாபாரம் செய்ய வழி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை பயணியா் விடுதி சாலையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கரோனா பொது முடக்கம் காரணமாக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக மாவட்ட பொதுச்செயலா் இரா.சிவமுருகஆதித்தன் தலைமையில் ஊா்வலமாக வந்த அக்கட்சியினரை காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து அக்கட்சியினா் அந்த இடத்திலேயே மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக, மாவட்ட பொதுச் செயலா் சிவமுருகஆதித்தன், தெற்கு மாவட்டத் தலைவா் பால்ராஜ், மகளிரணி மாநில பொதுச்செயலா் நெல்லையம்மாள், மாவட்ட பொதுச்செயலா் செல்வராஜ், விவசாய அணி மாவட்டத் தலைவா் துரைராஜ் இளந்துழகன், மாவட்ட துணைத் தலைவா் முத்துலெட்சுமி மற்றும் 124 பெண்கள் உள்பட 235 பேரை போலீஸாா் கைது செய்தனா்.