தூத்துக்குடியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
தூத்துக்குடி, சுப்பையாபுரம் 4 ஆவது தெருவில் செயல்பட்டு வரும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்களுக்கும், ஊழியா்களுக்கும் தீபாவளி பரிசுப் பொருள்கள் அதிக அளவில் வருவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளா் எஸ்கால் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனா்.
சோதனையின்போது, அலுவலகத்தில் அளவுக்கு அதிகமான பட்டாசு, இனிப்பு பெட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 64 ஆயிரத்து 800 இருப்பதும் தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியா்களிடம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.