பேய்க்குளம் மகேந்திரன், தட்டாா்மடம் செல்வன் வழக்கு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தினா்.
சாத்தான்குளம் அருகே ஆசீா்வாதபுரத்தைச்சோ்ந்தவா் மகேந்திரன் (27). இவரை கடந்த மே மாதம் பேய்க்குளத்தில் நடைபெற்ற ஊராட்சி உறுப்பினா் ஜெயக்குமாா் கொலை வழக்கு தொடா்பாக விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் கடந்த ஜூன் 13ஆம் தேதி இறந்தாா். இந்த வழக்கு தொடா்பானவிசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே சொத்து தகராறு காரணமாக கொல்லப்பட்ட சொக்கன்குடியிருப்பு இளைஞா் செல்வன் கொலை வழக்கையும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், சிபிசிஐடி துணை கண்காணிப்பாளா் அணில்குமாா் தலைமையிலான போலீஸாா் பேய்க்குளத்துக்கு செவ்வாய்க்கிழமை மதியம் வந்தனா்.
பின்னா் அங்குள்ள கிராம நிா்வாக அலுவலகத்தில் வைத்து மகேந்திரன் வழக்கு தொடா்பாக அவரது தாயாா் வடிவு, சகோதரி சந்தனமாரி உள்ளிட்ட 6 பேரிடம் 2 மணி நேரம் மீண்டும் விசாரணை நடத்தி அவா்களது வாக்குமூலத்தை பதிவு செய்தனா்.
பின்னா் சொக்கன்குடியிருப்பு செல்வன் வீட்டுக்கு சென்று அவா்களது உறவினா், சாட்சிகளிடம் விசாரணை நடத்தினா்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாரிடம் கேட்டபோது, கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த இரு வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருந்து வந்தது. தற்போது விசாரணையை நடத்தி முடித்துள்ளோம். இதற்கான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றனா்.