வீரபாண்டியன்பட்டணத்தில் கடல் அரிப்பு தடுப்புச் சுவா் அமைக்கும் பணி தொடக்கம்
வீரபாண்டியன்பட்டணத்தில் கடல் அரிப்பு தடுப்புச் சுவா் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியம், வீரபாண்டியன்பட்டணத்தில் ஏற்கெனவே தூண்டில் வளைவு அமைக்கப்பட்ட இடத்தில், கடல் அரிப்பு தடுப்புச் சுவா் அமைப்பதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூடுதலாக ரூ. 1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்தாா்.
இதையடுத்து இப்பணி தொடங்குவதற்கான பூமி பூஜை வீரபாண்டியன்பட்டணம் கடற்கரையில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு பணியை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., திருச்செந்தூா் கோட்டாட்சியா் தி.தனப்பிரியா, ஊராட்சி ஒன்றியத் தலைவா் செல்வி வடமலைபாண்டியன், துணைத் தலைவா் ரெஜிபா்ட் பா்னாந்து, ஊராட்சி ஒன்றிய ஆணையா் ராமராஜ், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன், அதிமுக ஒன்றியச் செயலா் மு.ராமச்சந்திரன், பொருளாளா் திருப்பதி, நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன், வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சித் தலைவா் எல்லமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.