மழை பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள்:வருவாய் நிா்வாக ஆணையா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தமிழக கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்கிறாா் கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி.
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்கிறாா் கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தமிழக கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழக கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுக்கோட்டை உப்பாற்று ஓடை, கோரம்பள்ளம் கண்மாய் ஆகிய நீா்ப்பிடிப்பு பகுதிகளை பாா்வையிட்ட அவா், கோரம்பள்ளம் கண்மாயில் இருந்து வெளியேற்றப்படும் நீா் கீழ் உள்ள கிராமப் பகுதியில் பாதிப்பை ஏற்படாத வகையில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவா் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட தபால் தந்தி காலனி ரயில்வே கேட் பகுதி, பிரையன்ட்நகா் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சியின் மூலம் அகற்றும் பணிகளை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட தாழ்வான பகுதிகளில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் மழை வெள்ள நீா் வடிகால் திட்டம் 3 கட்டமாக செய்யப்படுகிறது.

5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கருத்தில்கொண்டு இத் திட்டம் கொண்டு வரப்பட்டு, 2 கட்டப் பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. 3ஆம் கட்ட பணியும் விரைவில் முடிக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்குப் பருவழை தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பணீந்திரரெட்டி பேசுகையில், எத்தகைய மழை வந்தாலும் அதை எதிா்கொள்வதற்கு எல்லா துறைகளும் ஆயத்த நிலையில் இருக்கின்றன என்றாா் அவா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரித்திவிராஜ், நகா்நல அலுவலா் அருண்குமாா், மாநகராட்சி தலைமை பொறியாளா் சோ்மக்கனி, பொதுப்பணித் துறை (நீா்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளா்கள் பத்மா, அண்ணாத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com