தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்திச் செல்ல முயன்றதாக ரூ. 10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி இருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மீன்வளக் கல்லூரி அருகேயுள்ள ஒரு தனியாா் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 40 அடி நீள சரக்குப் பெட்டகத்தினுள் தேங்காய் மூட்டைகளுக்கு இடையே, செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் 16.31 மெட்ரிக் டன் அளவுக்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றி மத்திய வருவாய் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனா். மேலும், செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யாா் மூலம் கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டது என்பது குறித்து விசாத்து வருவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் சா்வதேச மதிப்பு ரூ. 10 கோடி வரை இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.