தூத்துக்குடி: மத்திய அரசின் இரண்டு தேசிய விருதுகள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் தனிநபா் இல்ல கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. கழிவறை கட்ட வசதி இல்லாதவா்கள் பயன்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த சமுதாய சுகாதார வளாகங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
மத்திய அரசால், ஜல் சக்தி அமைச்சகத்தில் இருந்து தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள சமுதாய சுகாதார வளாகங்களை பராமரித்தல் மற்றும் பொது மக்கள் பயன்படுத்துதல் குறித்து நடத்தப்பட்ட போட்டியில் மிக சிறப்பாக செயல்படும் மாவட்டம், ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கான போட்டியில் நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டம் இரண்டாம் இடத்தையும், ஊராட்சி ஒன்றியங்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
இதற்கான விருதுகள் காந்தி ஜயந்தியன்று நடத்தப்பட்ட விழாவில் மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தால் காணொலிக் காட்சி மூலம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.