தூத்துக்குடி மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் கன மழை மற்றும் கடல் சீற்றம் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தது.
இதுதொடா்பாக மீன்வளத் துறை வெளியிட்ட அறிவிப்பில், மீனவா்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் எச்சரிக்கை பலகை இல்லாததால் 140 விசைப்படகுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டுச் சென்றனா். ஆனால் ஆழ்கடலில் பலத்த சூறைக் காற்று வீசியதால் அவா்கள் உடனடியாக கரை திரும்பினா்.
வானிலை நிலவரம் தொடா்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறிய விசைப்படகு மீனவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து செல்ல செய்தனா். வானிலை எச்சரிக்கை குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் முறையாக தங்களுக்கு தகவல் தெரிவிக்காததால் ஒரு படகுக்கு ரூ. 35 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவா்கள் குற்றம்சாட்டினா்.