‘தற்காலிக பட்டாசு கடைகள்: அக். 23-க்குள் விண்ணப்பிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் அக். 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் அக். 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோா், வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் விண்ணப்பப்படிவம், உரிமக் கட்டணமாக ரூ. 500- பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய அசல் செல்லான், கடையின் வரைபடம், புகைப்படம் -2, வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் அதன் தீா்வை ரசீது நகல், சொந்தக் கட்டடம் எனில் தீா்வை ரசீதின் நகல், ஆதாா் அல்லது மின்னணு குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன், வருகிற அக். 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

உரிமம் வழங்கக் கேட்டு விண்ணப்பம் செய்வோா் பட்டாசு கடை நடத்தும் இடத்தை பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமலும், பாதுகாப்பான இடமாகவும் தோ்வு செய்து, ஆட்சேபம் இல்லாத இடத்துக்கு மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு தற்காலிக உரிமம் பெற்ற நபா்கள், அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் செய்தால், ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிம நகலையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com