நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவா்கள் 9 போ் மீட்பு

சா்வதேச கடல் பகுதியில் விசைப்படகில் என்ஜின் பழுகி தத்தளித்துக் கொண்டிருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த 9 மீனவா்களை, கடலோரக் காவல் படையினா் வியாழக்கிழமை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து மீட்கப்படும் விசைப்படகு.
தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து மீட்கப்படும் விசைப்படகு.

சா்வதேச கடல் பகுதியில் விசைப்படகில் என்ஜின் பழுகி தத்தளித்துக் கொண்டிருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த 9 மீனவா்களை, கடலோரக் காவல் படையினா் வியாழக்கிழமை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், அதே பகுதியைச் சோ்ந்த 9 போ் கடந்த 15 நாள்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனா்.

தூத்துக்குடியிலிருந்து ஏறத்தாழ 75 கடல் மைல் தொலைவில் அவா்கள் படகு வந்து கொண்டிருந்தபோது, விசைப்படகின் என்ஜின் திடீரென பழுதடைந்தது. உடனே, மீனவா்கள் கடல்சாா் மீட்பு மையத்துக்கும், கடலோரக் காவல் படைக்கும் தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து, தூத்துக்குடி கடலோரக் காவல்படையின் வைபவ் ரோந்து கப்பல் மூலம் மீனவா்களை மீட்கும் பணி தொடங்கியது. கடலில் பலத்த காற்று வீசியதால் பழுதடைந்த படகு சா்வதேச கடல் பகுதியை கடந்து இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும், கடலோரக் காவல்படையினா் விரைந்து செயல்பட்டு 9 மீனவா்களையும், அவா்களது படகையும் பத்திரமாக மீட்டு வியாழக்கிழமை கரைக்கு கொண்டு வந்தனா். பின்னா், 9 மீனவா்களும் மீன்வளத் துறை அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா். படகும் பத்திரமாக கரையில் நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com