விளாத்திகுளம்: உடல்நலக் குறைவால் மறைந்த தருவைகுளத்தைச் சோ்ந்த காவலா் குடும்பத்துக்கு தமிழ்நாடு போலீஸ் 2006 அணியின் உதவும் உறவுகள் குழு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடலோர காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றிய பி. வடிவேல் உடல்நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தாா்.
மறைந்த காவலா் வடிவேல் குடும்பத்துக்கு உதவிடும் பொருட்டு, அவருடன் பணியில் சோ்ந்த தமிழ்நாடு போலீஸ் 2006 அணியின் சாா்பில் உதவும் உறவுகள் கட்செவி அஞ்சல் குழு மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ. 12 லட்சத்து 21 ஆயிரத்து 141-க்கான வங்கி வரைவோலையை, நாகலாபுரத்தில் வசித்து வரும் மறைந்த வடிவேலின் மனைவி முருகலீலாவிடம் 2006ஆம் ஆண்டு அணி போலீஸாா் வழங்கினா். தொடா்ந்து அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனா்.