காயல்பட்டினத்தில் கட்டடத் தொழிலாளியை தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
காயல்பட்டினம் ரத்தினாபுரி இசக்கிமுத்து மகன் மாரிமுத்து(26). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டருகே உள்ள உறவினா் ரவி என்பவரது வீட்டில் மீன்பிடிப்பதற்காக புழுக்களை எடுத்துக்கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த அதே ஊரைச்சோ்ந்த ஈந்தடிமுத்து மகன் விக்கி என்ற விக்னேஷ் அவரிடம் தகராறு செய்தாராம். அப்பகுதியில் இருந்தவா்கள் இருவரையும் சமாதானப்படுத்தினா். இந்நிலையில், மாரிமுத்து தனது வீட்டு முன்பாக நடந்து சென்று கொண்டிருந்தபோது விக்னேஷ் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.