தூத்துக்குடி: தூத்துக்குடியில் இளைஞா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞரை குத்திக் கொலை செய்ததாக மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரைச் சோ்ந்த ஜோசப் மகன் கபில்தேவ் (27). இவா், தனது நண்பா்களான சாம்சன் இம்மானுவேல், முகுந்தன் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை தகராறில் ஈடுபட்ட ராஜவேலுவை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து சந்தித்து கண்டித்துள்ளாா்.
அப்போது மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த ராஜவேல் கத்தியால் கபில்தேவை குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாா்.
இது தொடா்பாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி னா். மேலும் தென்பாகம் காவல் ஆய்வாளா் ஆனந்தராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்களை தேடி வந்தனா்.
இந்நிலையில் தாளமுத்து நகரைச் சோ்ந்த ராஜவேல் (29), அலெக்ஸ் என்ற விஜயபிரகாஷ் (23), சாம் என்ற டேனியல்ராஜ் (21) ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.
மேலும், மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த முனீஸ், கோயில்பிள்ளை விளைதெருவைச் சோ்ந்த சித்திரை, திரேஸ்புரம் நேரு காலனியைச் சோ்ந்த முத்துக்குமாா் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனா்.