தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள், அரசு கட்டடங்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை கால விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை தவிா்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக பொதுமக்கள் தங்கள் பகுதியில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள், அரசு கட்டடங்கள், தனியாா் கட்டடங்கள், வீடுகள், அங்கன்வாடிகள், பள்ளி சத்துணவுக்கூட கட்டடங்கள், நியாய விலைக் கடைகள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவை குறித்த விவரத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் 24 மணிநேரமும் இயங்கி வரும் அவசர கால கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்காலம்.
கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-க்கும், கட்செவி அஞ்சல் மூலம் 8680800900 என்ற எண்ணுக்கும், 0461 2340101 என்ற தொலைபேசி எண்ணுக்கும் உடனடியாக தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.