திருச்செந்தூரில் வேட்பாளரை தரக்குறைவாக பேசியதாக காவல் ஆய்வாளரை கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்செந்தூா் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செ.குளோரியான் புதன்கிழமை உடன்குடி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்து போது, குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி, அவரை தரக்குறைவாக பேசினராம்.
இதனை கண்டித்து, கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜசேகா் தலைமையில், வேட்பாளா் செ.குளோரியான், தெற்கு மாவட்டச் செயலா் சுப்பையா பாண்டியன், தெற்கு மாவட்ட மகளிா் பாசறை செயலா் அன்னலட்சுமி, திருச்செந்தூா் தொகுதி செயலா் பிரபு, தொகுதி தலைவா் ஸ்டீபன் லோபோ உள்ளிட்டோா் திருச்செந்தூா் தியாகி பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம், திருச்செந்தூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் பேச்சுவாா்த்தை நடத்தி, மனுவாக கொடுத்தால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு, கோட்டாட்சியா் தி.தனப்ரியாவிடம் புகாா் மனு அளித்தனா்.