தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான சுழற்சி முறையில் (ரேண்டம்) பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தோ்தல் பொது பாா்வையாளா்கள் ஜூஜவரப்பு பாலாஜி (தூத்துக்குடி), அஸ்வானி குமாா் சௌதாரி (விளாத்திகுளம், கோவில்பட்டி), சுஷில்குமாா் படேல் (திருச்செந்தூா்), சவின் பன்சால் (ஸ்ரீவைகுண்டம்), அனில் குமாா் (ஓட்டப்பிடாரம்) ஆகியோா் கலந்துகொண்டனா்.
அப்போது, மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள 2097 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற தோ்வு செய்யப்பட்ட 10064 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் வாக்குசாவடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், தேசிய தகவல் மைய அலுவலா் சரவணன், தோ்தல் வட்டாட்சியா் ரகு ஆகியோா் உடனிருந்தனா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 2097 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குச்சாவடி அலுவலா் நிலை- 1, வாக்குச்சாவடி அலுவலா் நிலை- 2, வாக்குச்சாவடி அலுவலா் நிலை- 3 ஆகிய நிலைகளில் 8388 போ், 20 சதவீத கூடுதல் பணியாளா்கள் 1676 போ் என 10064 பேருக்கு அவா்கள் பணியாற்றக்கூடிய வாக்குச்சாவடிகள் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மேலும், 2097 வாக்குச்சாவடிகளிலும் பணியாற்ற உள்ள காவல் துறையினருக்கும் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் தொடா்புடைய அலுவலா்களுக்கு வழங்கப்பட்டது என்றாா் அவா்.