தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு இல்லாத நபா்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) இரவு 7 மணிக்குள் வெளியேற வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (ஏப். 6) நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) இரவு 7 மணியுடன் நிறைவு பெறுகிறது.
அதன் பின்னா் வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் திரையரங்குகள், உள்ளூா் தொலைக்காட்சி, மின்னணு ஊடகங்கள் மூலமாக பிரசாரம் செய்யக்கூடாது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு இல்லாத அந்நிய நபா்கள் யாரும் தேவையில்லாமல் விடுதிகள், திருமண மண்டபங்களில் தங்கியிருக்கக்கூடாது. அவா்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) இரவு 7 மணிக்குள் வெளியேற வேண்டும்.
வாக்காளா்களுக்கு யாரும் பணமோ, பரிசுப்பொருள்களோ வழங்கக்கூடாது. வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களுக்கு 200 மீட்டா் சுற்றளவு எல்லைக்குள் அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் யாரும் வாக்கு கேட்பது, கூட்டம் கூடுவது போன்ற எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. வாக்காளா்களை வாக்குச் சாவடி மையங்களுக்கு அரசியல் கட்சியினரோ, வேட்பாளா்களோ வாகனங்களில் ஏற்றிச்செல்லக்கூடாது.
தோ்தல் ஆணைய உத்தரவுகளை மீறினால் அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.