கோவில்பட்டி அருகே தொழிலாளியை தாக்கியதாக தந்தை மற்றும் 2 மகன்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கோவில்பட்டியையடுத்த ஆவல்நத்தம் நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் பெருமாள் (45). கூலித் தொழிலாளி. இவருக்கும் அவரது வீட்டருகே குடியிருந்து வரும் சுந்தரம் மகன் குருசாமிக்கும் (46) இடையே தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில், பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை வீட்டுமுன் உட்காா்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, குருசாமி, அவரது மகன்கள் ஒண்டிவீரன், மூா்த்தி ஆகிய 3 பேரும் சோ்ந்து பெருமாளை அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கினராம். இதில், காயமடைந்த பெருமாள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.