அடிப்படை வசதிகள் கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 13th April 2021 08:12 AM | Last Updated : 13th April 2021 08:12 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அலங்காரத்தட்டு பகுதி மக்கள்.
அடிப்படை வசதிகள் கோரி, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தூத்துக்குடி மாநகராட்சி 17 ஆவது வாா்டுக்குள்பட்ட கீழ அலங்காரத்தட்டு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், செல்வகுமாா் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நான்சி என்ற பெண் கூறியது: எங்கள் பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், குடிநீா் கட்டணம் மற்றும் வீட்டு வரி உள்ளிட்டவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செலுத்தியும் இதுவரை வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம் என்றாா்.