திருச்செந்தூா் அருகே மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
குரும்பூா், நாலுமாவடி சண்முகபுரத்தைச் சோ்ந்த சாா்லஸ் மகன் ஜானிடால்வின்(29), எலக்ட்ரீசியன். பரமன்குறிச்சி, கூழபெரியவன்விளையில் தந்தையுடன் வசித்து வந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். மனைவி ஆரோக்கிய புஷ்பம் பழையபேட்டையில் வசித்து வருகிறாா்.
கடந்த 18-ஆம் தேதி இரவு மகளுக்கு உடல்நலம் சரியில்லை என கூறியதால் ஜானிடால்வின், திருநெல்வேலிக்கு பைக்கில் புறப்பட்டுச் சென்றாராம். மெஞ்ஞானபுரம் சாலையில் குருநாதபுரம் விலக்கு பகுதியில் சென்ற போது, சாலையோரத்தில் உள்ள மரத்தில் பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.