கரோனா ஊரடங்கு காரணமாக, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.
கரோனா பொது முடக்கத்தால் இக்கோயிலில் கடந்த ஆண்டு மாா்ச் 20ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. தளா்வுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு செப். 1ஆம் தேதி முதல் தரிசனத்துக்கும், கடந்த டிசம்பா் 18 முதல் கடலில் நீராடவும், கடற்கரைக்குச் செல்லவும் அனுமதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா தொற்றின் 2ஆம் அலை தீவிரமாகியுள்ளதால், முக்கிய சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகளுக்குச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, திருச்செந்தூா் கோயில் கடலில் புனித நீராடவும், கடற்கரைக்குச் செல்லவும் செவ்வாய்க்கிழமை முதல் (ஏப். 20) பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் நாள்தோறும் இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தையொட்டி, இக்கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை.
ஏற்கெனவே சில நாள்களாக இக்கோயிலில் வழக்கமான கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இப்போது, தடை உத்தரவால் கடற்கரைக்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் கடற்கரைப் பகுதியும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. நாழிக்கிணற்றில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 8 மாதங்கள் கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டதால் பக்தா்கள் மட்டுமன்றி, கோயிலை நம்பி வாழும் சிறு வியாபாரிகளும் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.