திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனதுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆக. 1 (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆக. 3 வரை மற்றும் ஆக. 8-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சனிக்கிழமை இரவு உத்தரவிட்டது.
கோயிலில் அனுமதி ரத்து என்ற விவரம் தெரியாமலும், ரயில் மற்றும் பேருந்தில் தொலைதூரத்தில் இருந்து பயணம் செய்திருந்த பக்தர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள திருக்கோயில் நுழைவாயில் வழியாக கோயிலுக்கு செல்ல முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தங்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லாத பட்சத்தில் கடற்கரை வரை கோபுர தரிசனத்திற்காவது அனுமதிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், தாலுகா காவல் ஆய்வாளர் கனகா பாய், உதவி ஆய்வாளர்கள் முத்துஇருளன், சுப்பிரமணியன், வேல்முருகன் உள்ளிட்ட காவல் துறையினர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு உத்தரவை பக்தர்கள் மதித்திடுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
அதன் பின்னரே பக்தர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.