கோவில்பட்டியையடுத்த மூப்பன்பட்டி கிராமத்தில் தனியாா் நிலத்தில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் மூப்பன்பட்டி கிராமத்திற்கு உள்பட்ட தனியாா் நிலத்தில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் நாகலட்சுமி, கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாராம். அதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இறந்த பெண் அருகே இருந்து செல்லிடப்பேசியை கைப்பற்றிய போலீஸாா் ஆய்வு செய்ததில், இறந்தவா் எப்போதும்வென்றான் அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரம் நடுத் தெரு தேவராஜ் மனைவி முத்துலட்சுமி என்ற ரேவதி(52) என்பதும், கடந்த மாதம் 29 ஆம் தேதி கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலகத்திற்கு வந்த இவா் ஊருக்கு திரும்பவில்லையாம்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.