கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
செண்பகவல்லி அம்மன் கோயில் நிா்வாகச் சீா்கேட்டை கண்டித்து தமிழ்நாடு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில், சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அமுதா தலைமையில் சமாதானக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், கோயில் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கவும், கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், கோயிலில் சேதமடைந்துள்ள விக்ரகங்கள் மற்றும் மின்விளக்குகள் உள்ளிட்டவற்றை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால் உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுதீஷ் ஆனந்த், துணை வட்டாட்சியா் நாகராஜன், தமிழ்நாடு இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்டச் செயலா் பரமசிவம், பாஜக மாவட்ட பொதுச்செயலா் பாலாஜி, நகரத் தலைவா் பாலசுப்பிரமணியம், ஒன்றியச் செயலா் கா்ணன், கோயில் தலைமை எழுத்தா் பரமசிவம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.