தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தொழில் கடன் வழங்கும் முகாம் ஆக. 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி போல்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தொழில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் ஆக. 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முகாமின்போது, மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்படும்.
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ. 50 லட்சம் வரை வழங்கப்படும்.
பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும்.
இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழிலதிபா்கள் பயன்படுத்தி தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை அறிந்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.