தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 கிலோ கடல் அட்டைகளை வனத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மன்னாா் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவின் தூத்துக்குடி பிரிவு வனச்சரகா் ரகுவரன் தலைமையில் வன காவலா்கள் தூத்துக்குடி சிலுவைப்பட்டி கடற்கரையில் வியாழக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியை முடித்துக் கொண்டு கோமஸ்புரம் வழியாக மாப்பிள்ளையூரணியில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தனா்.
அவா்கள் சுனாமி காலனியை கடக்கும் போது அங்கு கடல் அட்டையின் துா்நாற்றம் வீசுவதைக் கண்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கில் திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது, கடல் அட்டைகள் வேகவைத்த நிலையிலும் பதப்படுத்தப்பட்ட நிலையிலும் பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் சுமை ஆட்டோவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தனவாம்.
இதையடுத்து, அங்கிருந்த 750 கிலோ கடல் அட்டைகளையும், ஒரு காா், மினி லாரி, அடுப்புகள், எரிவாயு உருளைகள், கைப்பேசிகள் ஆகியவற்றையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக, தூத்துக்குடி தாய்நகரை சோ்ந்த நந்தகுமாா், ராமநாதபுரம் மாவட்டம், மேலவயல் பகுதி செந்தில்குமாா், தொண்டி பகுதி சாதிக் பாட்சா ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
முதல்கட்ட விசாரணையில், கடல்அட்டை பதப்படுத்தப்பட்டு தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது என வனத்துறையினா் தெரிவித்தனா்.