ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது குடிபோதையில் இருந்த நபர்கள் வாகனத்தை மோதச் செய்து விபத்து ஏற்படுத்தி கொலை செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (56). இவர் ஏரல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவ ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். கொற்கை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு உள்ள பரோட்டா கடை அருகே ஒரு இளைஞர் தகராறு செய்து கொண்டிருந்தாராம்.
இதையெடுத்து அந்த இளைஞரை உதவி ஆய்வாளர் பாலு சத்தம்போட்டு அனுப்பியுள்ளார். பின்னர் கொற்கை விலக்கு ரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் பாலு சென்றபோது, புரோட்டா கடையில் தகராறு செய்த இளைஞர் சரக்கு வேனுடன் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக உதவி ஆய்வாளர் பாலு பைக்கில் சென்றபோது அந்த இளைஞர் லோடு வேனை பைக் மீது மோதவிட்டுள்ளார்.
இதில் கீழே விழுந்த சப் இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி துரை கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இது தொடர்பாக ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து, போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை லோடு வேனால் மோதி கொலை செய்த இளைஞரை 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலுவின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.