பிப். 9 இல் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம்
By DIN | Published On : 04th February 2021 07:41 AM | Last Updated : 04th February 2021 07:41 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் பிப். 9 ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கத்தின் (துடிசியா) பொதுச் செயலா் து. ராஜ்செல்வின் வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் உள்ள தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வழிமுறைகள், ஏற்றுமதி சட்ட திட்டங்கள் பற்றிய நான்கு நாள் பயிற்சியை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்துடன் (துடிசியா) இணைந்து தூத்துக்குடியில் நடத்த உள்ளது.
இந்தப் பயிற்சியில், ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், பொருளை பதப்படுத்துதல், சீரிய முறையில் பேக்கிங் செய்தல், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், இறக்குமதிக்கான சுங்கவரி கணக்கிடல் போன்ற விவரங்கள் விரிவாக விவாதிக்கப்படும்.
பயிற்சியில் 18 வயது நிரம்பிய குறைந்தது பத்தாம் வகுப்பு முடித்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். பயிற்சிக் கட்டணம் ரூ. 4,600. மேலும் விவரங்கள் அறிய 9791423277 மற்றும் 9843878690 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளவும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.