தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 5) நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு, கோவில்பட்டியில் வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் பிரசார பயணத்தின்படி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.
வெள்ளிக்கிழமை (பிப். 5) காலை 8 மணிக்கு கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் அவருக்கு, மாவட்ட எல்லையான பந்தல்குடி விலக்கில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா சிலைக்கு மரியாதை: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 52ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி காய்கனிச் சந்தை அருகே அமைந்துள்ள அவரது சிலைக்கு, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமாா் ரூபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.