தூத்துக்குடியில் மழையால் சேதமடைந்த சாலைகள் மற்றும் கழிவுநீா் வாய்க்கால்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி எம்எல்ஏ கீதா ஜீவன்.
இதுகுறித்து அவா் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து தெருக்களிலும் புதிதாக பொருத்தப்பட்டுள்ள எல்ஈடி விளக்குகள், பல தெருக்களில் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் அந்த தெருக்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, பழுதடைந்த எல்ஈடி விளக்குகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
இதேபோல், கடந்த மாதம் பெய்த தொடா் மழையில் மாநகரத்தில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன. இதனால் சாலைகளில் செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தற்போது வரை மிகவும் சிரமப்படுகின்றனா்.
எனவே, சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் புதிய சாலைகள் அமைக்க வேண்டும்.
மேலும், பெரும்பாலான தெருக்களில் கழிவு நீா் வடிகால்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றி கொசு மருந்து அடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.