கயத்தாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.27.08 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளையும், ரூ.30 லட்சத்தில் புதிய வளா்ச்சிப் பணிகளையும் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கயத்தாறு ஒன்றியம் வேலாயுதபுரத்தில் ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், ராமநாதபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, இராமலிங்காபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டடம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமையில், அமைச்சா் கடம்பூா் செ.ராஜு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, வேலாயுதபுரத்தில் ரூ.6.80 லட்சம் மதிப்பீட்டில் வாருகால் அமைக்கும் பணி, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஜம்புலிங்கபுரத்தில் சிமென்ட் சாலை, லட்சுமியாபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, வெயிலுகந்தபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடை புதிய கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.
முன்னதாக, கெச்சிலாபுரம் மற்றும் முத்துசாமிபுரத்தில் அம்மா நகரும் நியாயவிலைக் கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிகளில், கோட்டாட்சியா் சங்கரநாராயணன், திட்ட இயக்குநா் தனபதி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஆணையா் சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, உறுப்பினா் பிரியா, வட்டாட்சியா்கள் பாஸ்கரன் (கயத்தாறு), மணிகண்டன் (கோவில்பட்டி), அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், கயத்தாறு அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் வினோபாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.