திருச்செந்தூரில் மாசித் திருவிழா ஆறாம் நாளான திங்கள்கிழமை திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப். 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியருள்கின்றனர்.
திங்கள்கிழமை ஆறாம் திருவிழாவன்று மாலையில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் ஸ்ரீ ஜயந்திநாதர் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வைத்து சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம், தவத்திரு. ஸ்ரீ மத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், ஆதீன தென்மண்டல மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.