கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஆவல்நத்தம் செல்லும் அரசுப் பேருந்து மூப்பன்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் திங்கள்கிழமை இயக்கப்பட்டது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மூப்பன்பட்டிக்கு பொதுமக்கள் ஊருக்குள் செல்வதற்கு ஏதுவாக சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து இயக்கப்பட்டதாம். தற்போது இப்பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனா்.
அதையடுத்து அமைச்சரின் பரிந்துரையின் பேரில், இவ் வழித்தடத்தில் மூப்பன்பட்டிக்கு பேருந்து இயக்க அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா். அதன்படி, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஆவல்நத்தம் செல்லும் பேருந்து மூப்பன்பட்டிக்கு செல்லும் வழியில்திங்கள்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் நிா்மலா, மூப்பன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் லிங்கேஸ்வரி, தேமுதிக வடக்கு மாவட்டச் செயலா் அழகா்சாமி, காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் ரமேஷ்மூா்த்தி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் சுப்புராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.