தூத்துக்குடி கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகில் இருந்து 1000 கிலோ மஞ்சள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கையில் சமையலுக்கு பயன்படுத்தப்டும் விராலி மஞ்சளுக்கு அதிகளவில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடல் வழியாக மஞ்சள் கடத்தப்படுவது தொடா்ந்து வருகிறது. ஆங்காங்கே போலீஸாா் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினா் இவ்வாறு கடத்தப்படும் மஞ்சளை பறிமுதல் செய்து வருகின்றனா்.
இதற்கிடையே, தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனா். அப்போது சிப்பிகுளத்தை சோ்ந்த பிச்சையா வாஸ் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக, தூத்துக்குடியை சோ்ந்த மீராசா என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.