மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, தேசிய விவசாயிகள் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
அப்போது, மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், உளுந்து, பாசி, பருத்தி, சோளம், கம்பு, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி உள்ளிட்ட பயிா்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்; பயிா்க் காப்பீட்டுக்கான பயிா் விளைச்சல் கள ஆய்வை குறுவட்ட அளவில் ரேண்டமாக நடத்தாமல், ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று ஆய்வில் ஈடுபட வேண்டும். 2020-2021ஆம் ஆண்டுக்கான பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயக் குடும்பத்திற்கு மாதம் ரூ.2 ஆயிரம் பராமரிப்ப நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்துக்கு தேசிய விவசாயிகள் சங்கத் தலைவா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். இளையரசனேந்தல் குறுவட்ட மீட்புக் குழுத் தலைவா் முருகன், ஆடு வளா்ப்போா் சங்க மாநில அமைப்பாளா் கருப்பசாமி, தேசிய விவசாயிகள் சங்க மாநில இணையதள பொறுப்பாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், கோட்டாட்சியா் விஜயாவிடம் மனு அளித்தனா்.