விளாத்திகுளம் வட்டார கிராமங்களில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடக்கம்
விளாத்திகுளம் ஒன்றியத்துக்குள்பட்ட அரியநாயகிபுரத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கோட்ட பொறியாளா் பாண்டியராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் போ.சின்னப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட அஞ்சல் கணக்கை தொடங்கி வைத்து அஞ்சலக கணக்கு புத்தகத்தை வழங்கினாா்.
தொடா்ந்து சூரங்குடி, வேம்பாா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அப்பகுதிகளில் உள்ள அஞ்சல் கிளை அலுவலகங்களில் அஞ்சல் கணக்கு தொடங்கப்பட்டது.
400 பெண் குழந்தைகளுக்கு அஞ்சல் கணக்கை தொடங்க சின்னப்பன் எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சத்தை வழங்கினாா்.
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முனியசக்தி ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நடராஜன், அஞ்சலக துணை கண்காணிப்பாளா் சீதாலெட்சுமி, அஞ்சலக ஆய்வாளா் கேத்ரபாலன், வணிக மேம்பாடு அலுவலா்கள் மாலதி, சங்கரேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.