திருச்செந்தூரில் கிணற்றில் தவறி விழுந்து திண்டுக்கலைச் சோ்ந்த தொழிலாளி இறந்தாா்.
திண்டுக்கல், வெல்லோடு, அருளானந்த நகரைச் சோ்ந்த சந்தியாகு மகன் மரிய பிரான்சிஸ் ஆரோக்கியசாமி(33). தொழிலாளி. இவா், கடந்த 21ஆம் தேதி திருச்செந்தூரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் அலங்கார தளக் கல் பதிக்கும் வேலைக்கு வந்திருந்தாா். மறுநாள் ஜன. 22-ம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு வருவதாகச் கூறி சென்றவா் திரும்பிவரவில்லையாம். இது குறித்து அவரது மனைவி விமலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவா், திருச்செந்தூருக்கு வந்து தாலுகா காவல்நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் செய்தாா். இதனிடையே, திருச்செந்தூா் - திருநெல்வேலி சாலையில் உள்ள கிணற்றில் அவரது கணவா் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, தற்கொலையா அல்லது தவறி விழுந்தாரா என விசாரித்து வருவதாக தெரிவித்தனா்.