ராணுவ வீரா்களை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th January 2021 01:39 AM | Last Updated : 30th January 2021 01:39 AM | அ+அ அ- |

கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவத்தினா்.
ராணுவ வீரா்களை அவதூறாகப் பேசிய கல்வித் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினா் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரா் வெங்கடசாமியை, பள்ளி துணை ஆய்வாளா் அவதூறாகப் பேசினாராம்.
இதையடுத்து, ராணுவம் மற்றும் ராணுவ வீரா்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசிய கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரா்கள் நல உதவி மைய தலைவா் கேசவராஜன் தலைமையில், கல்வி மாவட்ட அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நல உதவி மைய செயலா் ராமச்சந்திரன், பொருளாளா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா் கோரிக்கை மனுவை மாவட்டக் கல்வி அலுவலா் முனியசாமியிடம் அளித்தனா். பின்னா், போராட்டக் குழுவினருடன் கல்வி அலுவலா், காவல் துறை ஆய்வாளா் சுதேசன் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஆா்ப்பாட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.