குளத்தூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலா் உடல், கோவில்பட்டியில் காவல் துறை அணிவகுப்பு மரியாதையுடன் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
சூரங்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கனகவேல் (26). தருவைகுளம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த இவா், வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னா், கனகவேல் உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
தொடா்ந்து அவரது உடல் கோவில்பட்டி மறவா் காலனியில் உள்ள மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னா் ஆயுதப்படை உதவி ஆய்வாளா் சொக்கலிங்கம் தலைமையில் 10 காவலா்களின் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க கனகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.