தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்காக கரோனா தடுப்பு உபகரணங்கள் இயேசு விடுவிக்கிறாா் சபை சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.,
நாலுமாவடியில் உள்ள இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்களின் சபை சாா்பில், 2,500 காவலா்கள் பயன்பெறும் வகையில் ரூ. 12,50,000 மதிப்பில் தரமான முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்டவை அடங்கிய பெட்டகத்தை, சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாரிடம் இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் நிறுவனா் மோகன் சி. லாசரஸ் வழங்கினாா்.
அப்போது, இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் மருத்துவக் குழு ஒருங்கிணைப்பாளா் கெயின், ஊழியத்தின் மக்கள்தொடா்பு அலுவலா் சாந்தகுமாா், மேலாளா் செல்வக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
அரசு சாா்பில்...: இதனிடையே,தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு ரூ. 5 லட்சம் செலவில் கரோன தடுப்பு உபகரணங்களை அரசு வழங்கி உள்ளது. அதில், முதல்கட்டமாக தூத்துக்குடி நகரம், ஊரகம், திருச்செந்தூா், மணியாச்சி ஆகிய நான்கு உள்கோட்ட காவல்துறையினருக்கு சில தினங்களுக்கு முன்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. தற்போது, இரண்டாம் கட்டமாக ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம் ஆகிய நான்கு உள்கோட்ட காவல் துறையினருக்கு எஸ்பி. முன்னிலையில் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.