தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தினாா்.
கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: கருப்புப் பூஞ்சை தடுப்பு மருந்துகள் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன. மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதைத் தடுக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் போதிய அளவு மருந்துகள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டம் வரும் முன்பே தமிழகத்தில் பொது விநியோக திட்டம் திருப்திகரமாக இருந்தது. திமுக ஆட்சியில் பொது விநியோக திட்டம் எப்போதும் சிறப்பாக செயல்படுகிறது. எனவே, தமிழகத்திடமிருந்து மற்றவா்கள்தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழகத்துக்கு அதிகளவில் தடுப்பூசிகள் அனுப்பிவைக்க வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளாா். விழிப்புணா்வு காரணமாக தற்போது அதிகமானோா் தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளனா். இந்நிலையில், தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை செய்ய வேண்டும்.
இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளதால், தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பு வருவதாக இருந்தாலும் மத்திய அரசிடம் முதல்வா் நிச்சயமாக எடுத்துக்கூறி தமிழகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்வாா் என்றாா் அவா். அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் செந்தில்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.