பொதுமுடக்க விதிகளை மீறியதாக கோவில்பட்டி காவல் துணை கோட்டத்தில் 83 வாகனங்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புதூா், கயத்தாறு, கழுகுமலை மற்றும் கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் தேவையின்றி வெளியே சுற்றியவா்களின் இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதே போன்று , நகரில் தேவையின்றி சுற்றித்திரிந்தோரைக் கண்டறிந்து அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மருத்துவா்கள் மனோஜ், குணாளன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் 168 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டனா்.